Wednesday, November 16, 2011

லட்சுமண், தோனி சதம்: வலுவான நிலையில் இந்தியா!


வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 631 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் டோனி 144 ரன், லஷ்மண் ஆட்டமிழக்காமல் 176 ரன் விளாசினர். கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 346 ரன் எடுத்திருந்தது. கம்பீர் 65, சேவக், சச்சின் தலா 38, டிராவிட் 119, இஷாந்த் (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில் லஷ்மண் (73), யுவராஜ் (0) இருவரும் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். யுவராஜ் 25 ரன் எடுத்து சம்மி வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, லஷ்மணுடன் கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிதறடித்தனர். டோனி 13 மற்றும் 16 ரன் எடுத்திருந்தபோது கெமார் ரோச் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் பிடிபட்டார். எனினும், இரண்டு முறையும் ‘நோ பால்’ ஆக அமைந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

பொறுப்புடன் விளையாடிய லஷ்மண் டெஸ்ட் போட்டிகளில் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்தார். மறு முனையில் அதிரடியில் இறங்கிய டோனி பவுண்டரியும் சிக்சருமாக விளாசி, டெஸ்டில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர். டோனி & லஷ்மண் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 224 ரன் சேர்த்து அசத்தியது.

டோனி 144 ரன் எடுத்து (175 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழந்தார். இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 631 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. லஷ்மண் 176 ரன் (280 பந்து, 12 பவுண்டரி), அஷ்வின் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் சம்மி, ரோச் தலா 2, பிடல், பிஷூ, பிராத்வெய்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ், 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன் எடுத்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பரத் 1, பிராத்வெய்ட் 17 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கிர்க் எட்வர்ட்ஸ் 12, பிராவோ 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ டேனியல் கிரேக்-ரகசியமாக திருமணம்



ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ டேனியல் கிரேக் தனது காதலியை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். ‘கேசினோ ராயல்’, ‘குவாண்டம் ஆஃப் சோலஸ்’, ‘ப்ளட்ஸ்டோன்’ ஆகிய ஜேம்ஸ் பாண்ட் படங்கள் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் டேனியல் கிரேக். தனது மனைவி பியோனா லாடனை விவாகரத்து செய்த பின், நடிகை ராச்சல் வீஷை காதலித்து வந்தார். ராச்சல், ‘த மம்மி’, ‘மம்மி ரிடர்ன்ஸ்’, ‘கான்பிடன்ஸ்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர்கள் ரகசியமாக கடந்த 22ம் தேதி நியூயார்க்கில் திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணத்தில் கிரேக்கின் 18 வயது மகள் எல்லா, ராச்சலின் நான்கு வயது மகன் ஹென்றி உட்பட 4 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.

மாருதி டீசல் கார் ரூ.10,000 வரை உயர்வு


முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, டீசலில் இயங்கும் கார்களின் விலையை ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை உயர்த்துகிறது. கார் தயாரிப்புக்கு தேவையான பெரும்பான்மை உதிரிப்பாகங்கள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், யென் மதிப்பு உயர்வு மற்றும் உதிரி பாகங்களின் விலையேற்றம் காரணமாக டீசல் கார்களின் விலை உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் சிறிய ரக காரான ரிட்ஸ் மற்றும் ஸ்விப்ட், எஸ்எக்ஸ்4, டிசைர் சேடான் மாடல் கார்களின் விலையை உடனடியாக ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை உயர்த்தப் போவதாக நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி: ஆஸி., பிரதமர் தீர்மானம்


 அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க உதவும் மூலப் பொருளான யுரேனியத்தை, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்க, ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது. ஆஸி.,யின் இந்த முடிவை, இந்தியா வரவேற்றுள்ளது.


இந்தியா, அணுமின் உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில், கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், இந்தியாவுக்கு அணுமின் தயாரிப்புக்குத் தேவையான யுரேனியத்தை வினியோகிக்க பல நிபந்தனைகள் விதித்தன.அவற்றில் ஒன்று தான், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின்படி, 1967க்கு முன், அணு ஆயுதப் பரிசோதனைகள் மேற்கொண்ட நாடுகள் மட்டுமே, அணு ஆயுதங்கள் வைத்திருக்கலாம் என அந்த ஒப்பந்தம் கூறுகிறது.


இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டது. இந்தப் பட்டியலில், பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா நாடுகளும் உண்டு.


ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததால், இந்தியாவுக்கான யுரேனியம் ஏற்றுமதிக்கு, ஆஸ்திரேலியா தடை விதித்தது.

இந்நிலையில், ஆஸி.,யைச் சேர்ந்த "தி ஏஜ்' பத்திரிகையில், கில்லார்டு நேற்று எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், அடுத்த மாதம், சிட்னியில் நடக்க உள்ள ஆளும் தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் பேச வேண்டிய சில முக்கியமான விஷயங்களில், இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வதையும் குறிப்பிட்டுள்ளார்.


இதைத் தொடர்ந்து, நேற்று அவர் அளித்த பேட்டியில்,"இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வது குறித்த தனது கொள்கையை, தொழிலாளர் கட்சி மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த ஏற்றுமதியால் ஆஸி., பொருளாதாரம் மேம்படும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்' என்றார்.

3,000 கி.மீ தூரம் உள்ள இல3,000 கி.மீ தூரம் உள்ள இலக்கை தாக்கும் அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி


அக்னி 4 அதிநவீன ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்திய ராணுவ விஞ்ஞானிகள் அக்னி ரக ஏவுகணை தயாரித்துள்ளனர். அக்னி 1, அக்னி 2, அக்னி 3 ரக  ஏவுகணைகள் சோதனை முடிந்து ராணுவத்தில் சேர்க்கப்பட்டன. இதை தொடர்ந்து அக்னி 2 பிரைம் என்ற பெயரில் அதிநவீன ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகள் தயாரித்தனர். 

இந்த ஏவுகணை 3 ஆயிரம் கி.மீ தூரம் பறந்து சென்று இலக்கை தாக்கக்கூடியது. இந்த ஏவுகணையில் 1 டன் எடை கொண்ட அணு குண்டுகளையும் பொருத்தலாம்.  கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டபோது அது தோல்வியில் முடிந்தது. ஏவிய சில விநாடிகளில்  கடலுக்குள் பாய்ந்தது. இந்த நிலையில், 20 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணையின் பெயர் அக்னி 4 என்று மாற்றப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

ஒடிசா மாநிலம் உள்ள பாலசோரில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள வீலர் தீவில் இருக்கும் ஏவுகணை சோதனை தளத்தில் இருந்து அக்னி 4 ஏவுகணை நேற்று மீண்டும் சோதனை செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு ஏவுகணை ஏவப்பட்டது. இது குறிப்பிட்ட தூரம் பறந்து சென்று இலக்கை சரியாக தாக்கியது. இதையடுத்து, ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

இது பற்றி விஞ்ஞானி ஒருவர் கூறுகையில்,ÔÔஅக்னி 2 ரக ஏவுகணைகள் 2 ஆயிரம் கி.மீ தூரமும், அக்னி 3 ஏவுகணைகள் 3,500 கி.மீ தூரமும் பறந்து செல்லக்கூடியவை. இடைப்பட்ட தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்குவதற்காக அக்னி 4 ரக பயன்படுத்தப்படும். இலக்கை குறிதவறாமல் தாக்கி அழிக்க வசதியாக நவீன கருவிகள் இந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ளனÕÕ என்றார்.

உ.பி.,யை நான்காக பிரிக்க அமைச்சரவை தீர்மானம்: மாயாவதி அடுத்த அதிரடி



உத்தரப்பிரதேசத்தை நான்காகப் பிரிக்கும் தீர்மானம், சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்போவதாக, முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில், 80 லோக்சபா தொகுதிகளும், 403 சட்டசபைத் தொகுதிகளும் உள்ளன. இந்த மாநிலத்தின் மக்கள் தொகை 19 கோடி. நாட்டின் ஜனத் தொகையில், 16 சதவீதம் பேர் இங்கு தான் உள்ளனர்.மிகப்பெரிய மாநிலமான உ.பி., ஏற்கனவே, இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பாரதிய ஜனதா ஆட்சியில், உத்தரகண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. தற்போது, இந்த மாநிலத்தை, மேலும் நான்காகப் பிரிக்க, மாயாவதி திட்டமிட்டுள்ளார். ஆனால், எதிர்க்கட்சியான சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள், இந்த திட்டத்தை எதிர்க்கின்றன.

இது குறித்து, லக்னோவில், நிருபர்களிடம் மாயாவதி கூறியதாவது:சட்டசபை கூட்டத் தொடர், வரும் 21ம்தேதி துவங்குகிறது. சிறிய மாநிலம் மற்றும் மாவட்டமாக இருக்கும் போது தான், அதன் நிர்வாகம் நன்றாக இருக்கும் என அம்பேத்கர் கூறியுள்ளார். அவரது கருத்தை செயல்படுத்தும் விதத்தில், பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வரும் போதெல்லாம், புதிய மாவட்டங்களை உருவாக்குவது வழக்கம். இதே போல, இந்த மாநிலத்தை நான்காகப் பிரித்து, பூர்வாஞ்சல், பண்டல்கண்ட், அவாத் பிரதேஷ், பச்சிம் பிரதேஷ் ஆகிய மாநிலங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

நான்கு மாநிலங்களை உருவாக்குவதற்குரிய தீர்மானம், வரக்கூடிய சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய மாநிலங்களை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி, மத்திய அரசை வற்புறுத்துவோம்.நாட்டின் பெரும்பாலான பிரதமர்கள், இந்த மாநிலத்திலிருந்து தேர்வானவர்கள் தான். இருப்பினும், இந்த மாநிலம், ஒட்டுமொத்தமாக வளர்ச்சியடையவில்லை. மாநிலத்தின் அனைத்து வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டத்துக்கு, கணிசமான நிதி ஒதுக்கும் படி கேட்டோம். ஆனால், இந்த விஷயத்தில், மத்திய அரசு சாதகமான நடவடிக்கை எடுக்கவில்லை.இவ்வாறு, மாயாவதி கூறினார்.

பெட்ரோல் விலை 2 ரூபாய் 22 பைசா குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு நிலைத்தன்மை பெற்றுள்ளது உள்ளிட்ட காரணத்தினால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.22 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. கடந்த சிலநாட்களுக்கு முன், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.80 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் வி‌லை ஒரு ரூபாய் 80 பைசா உயர்த்தப்பட்டன. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்கட்சிகள் பலத்த ஆட்சேபம் தெரிவித்தன. தொடர்ந்து பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் சமூகமாக நடத்துவதில்பிரச்னை எழுந்தது. பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் பெ‌ட்ரோல் விலை உயர்த்தப்பட்டது சாதாரண மக்களை பெரிதும் பாதிக்கும் என எதிர்கட்சிகள் கூறின.

கடந்த பெட்ரோல் விலை உயர்வின் போது, சர்வதேச சந்தையில் பெட்ரோல் ஒரு பேரல் வி‌லை 121 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இருந்தது. தற்போதைய அளவில் ஒரு பேரல் பெட்ரோல் விலை 115.8 அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது. அதேபோல், அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ. 50 என்ற அளவிலிருந்து ரூ. 49.20 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலையை குறைக்க முன்வந்துள்ளன.

பெட்ரோல் விலை 2 ரூபாய 22 பைசா குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து டில்லியில் பெட்ரோல் விலையில் 2 ரூபாய் 22 பைசா குறைக்கப்பட்டு ரூ.66.42 என்ற விலையில் விற்பனை செய்யப்படும். மும்பையில் 2 ரூபாய் 34 பைசா குறைக்கப்பட்டு ரூ.71.47 ஆக விற்கப்படும். கோல்கட்டாவில் 2 ரூபாய் 31 பைசா குறைக்கப்பட்டு ரூ.70.84 என்ற அளவில் விற்பனை செய்யப்படும். சென்னையில் 2 ரூபாய் 35 பைசாவும் குறைக்கப்பட்டு ரூ.70.38 ‌ என்ற அளவில் விற்பனை செய்யப்படும்.

பெட்ரோல் விலை குறைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியன் ஆயில் கழக தலைவர் புடோலா, பெட்ரோல் விலை உயர்வுக்கு பின்னர், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் ஏற்பட்ட மாற்றங்கள், மற்றும் ரூபாயில் ஏற்பட்ட மாற்றங்களினால் நாங்கள் லிட்டருக்கு ஒரு ரூபாய் 85 பைசா அளவில் லாபம் கிடைத்தது. இதனை நாங்கள் நுகர்வோருக்கு அளிக்கிறோம் என கூறினார்.

பெட்ரோல் விலை, கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ரூபாய் என்ற அளவில் குறைக்கப்பட்டதற்கு பின்னர் தற்போது முத‌ல் முறையாக குறைக்கப்படுகிறது.